காமன்வெல்த் பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் புதிய சாதனை படைத்து தங்கம் வென்ற திருச்சி இளைஞர்கள்!

காமன்வெல்த் பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் புதிய சாதனை படைத்து தங்கம் வென்ற திருச்சி இளைஞர்கள்!
நியுசிலாந்து நாட்டில் நடைபெற்ற காமன்வெல்த் பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் திருச்சி மாவட்டம், சுப்பிரமணியபுரம் கோனார் தெருவில் வசிக்கும் ஆர். தினேஷ் சப்-ஜூனியர் 66 கிலோ உடல் எடைப் பிரிவில் புதிய சாதனைப் படைத்துள்ளார்.
இவர் டெட் லிஃப்ட் 218 கிலோ எடையைத் தூக்கி தங்கப்பதக்கம் வென்றதுடன் முந்தைய சாதனையான 217.5 கிலோ என்ற சாதனை முறியடித்து காமன்வெல்த் பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார். மேலும், ஸ்குவாட்டில் 200 கிலோ எடையைத் தூக்கி தங்கமும், பென்ச் பிரஸ்சில் 120 கிலோ எடையை தூக்கி தங்கமும் மொத்தம் 538 கிலோ எடையைத் தூக்கியதற்காக தங்கம் என நான்கு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.

இப்போட்டியின் இரண்டாவது அதிகபட்ச எடை தூக்கியவர் என்பதைப் பாராட்டி இவருக்கு “ஸ்டிராங்மேன்-2″ என்ற விருது வழங்கப்பட்டது.

மேலும், ஏர்போர்ட், காமராஜ் நகரைச் சேர்ந்த எஸ். ஷேக் அப்துல்லா என்பவர் 59 கிலோ எடைப் பிரிவில் டெட் லிஃப்ட் 170 கிலோ எடை தூக்கி தங்க பதக்கமும், ஸ்குவாட்டில் 210 கிலோ எடையைத் தூக்கி தங்கமும், பென்ச் பிரஸ்சில் 120 கிலோ எடையை தூக்கி தங்கமும் மொத்தம் 500 கிலோ எடையைத் தூக்கியதற்காக தங்கம் என நான்கு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.
இவர்களை லோகு பிட்னஸ் சென்டர் மாஸ்டர் T. லோகநாதன், மக்கள் சக்தி இயக்க திருச்சி மாவட்ட செயலாளர் இரா. இளங்கோ, மாநிலப் பொருளாளர் கே.சி. நீலமேகம், திருச்சி மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத்தின் தலைவர் கவிஞர் கோவிந்தசாமி, ரோட்டரி சங்க நிர்வாகிகள், லோகு பிட்னஸ் சென்டர் நண்பர்கள் இவர்களைப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
காமன்வெல்த் பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் சாதனை புரிந்து தாயகம் திரும்பும் இவர்கள் இருவரையும் லோகு பிட்னஸ் சென்டர் நண்பர்கள், திருச்சி மக்கள் சக்தி இயக்கம், ரோட்டரி சங்கம், மாநில, தேசிய மற்றம் சர்வதேச பவர் லிஃப்டர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திருச்சி மாவட்ட பொது மக்கள் சார்பாக வரவேற்பு நிகழ்வு (04-12-2022) ஞாயிறன்று மாலை 4.00 மணியளவில் திருச்சி விமான நிலையத்தில் நடைபெற உள்ளது.
