
திருச்சியில் சிறைவாசிகளுக்கு யோகா சான்றிதழ் வழங்கல்!
திருச்சி ஆண்கள் மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச் சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு அமிர்த யோகா மற்றும் தியானப் பயிற்சி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தமிழ்நாடு சிறைத் துறை சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சிறைவாசிகளுக்கும் மனநலம் மற்றும் உடல்நலத்தை பாதுகாக்கும் வகையில் தியானப் பயிற்சி மற்றும் யோகா பயிற்சிகள் நடத்தப்படுகிறது.

மாதா அமிர்தானந்தமயி மடம் மற்றும் அமிர்தா பல்கலைக்கழகம் இணைந்து நடத்திவரும் ஐஏஎம் (இன்டகரேட்டட் அமிர்தா மெமிட்டேசன்) என்னும் ஒருங்கிணைந்த அமிர்தா தியான நுட்பப் பயிற்சி மூலமாக அனைத்து சிறைவாசிகளும் பயனடைந்து வருகின்றனர்.
மே மாதம் முதல் அக்டோபர் வரை நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் நடைபெற்ற தியான மற்றும் யோகா பயிற்சியில் கலந்து கொண்டு பயனடைந்த சிறைவாசிகளுக்கு அமிர்தா பல்கலைக்கழகம் சார்பாக சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறை துறை திருச்சி சரகத் தலைவர் ஜெயபாரதி, சான்றிதழ்களை வழங்கினார். சிறைகண்காணிப்பாளர்கள் ஆண்டாள், ருக்மணி பிரியதர்ஷினி மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர் பரசுராமன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சிறை வாசிகளும் இப்பயிற்சியின் மூலம் தங்களுக்கு மனஅமைதி, தூக்கம் மற்றும் உடல்நலம் ஆகியவற்றில் நல்ல முன்னேற்றங்களை உணர்வதால், பயிற்சிகளை தொடர்ந்து செய்வதாகவும் உறுதி கூறினர். மாதா அமிர்தானந்தமயி மடத்தின் சார்பாக பிரம்மச்சாரினி பவானி, தன்னார்வலர்கள் வெங்கடேஷ்வரராவ், ஆனந்தன் மற்றும் சாந்தி மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.
