
பொதுமக்கள் நலனுக்காக நங்கவரத்தில் தேஜஸ் சுவாமிகளின் சமாதி தியானம்!
கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா நங்கவரம் ஒத்தக்கடை தென்கடைக்குறிச்சி பகுதியில் உள்ளது ஸ்ரீலஸ்ரீ பாலசுப்ரமணியன் நம்பூதிரி என்கிற தேஜஸ் சுவாமிகளின் ஸ்ரீ தட்ஷீண காளி சித்தர் பீடம் இதில் தேஜஸ் சுவாமிகள் உலக அமைதிக்காவும், வரும் புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பாக அமையவும் சமாதி நிலை தியானம் மேற்கொள்வதாக அறிவித்திருத்தார்.

இதன்படி, (7.12.2022) புதன்கிழமை மதியம் சமாதி நிலை மேற்கொண்டார். முன்னதாக செய்தியாளர்களிடம் கூறும் போது,
வரக்கூடிய 2023 புத்தாண்டில் கொரோனா போன்ற புதுவித நோய்கள் பரவுவதற்கும், இயற்கை சீற்றங்களுக்கும் வாய்ப்புள்ளது. இவற்றிலிருந்து பொதுமக்களை காப்பதற்காகவும், பேரழிவு ஏற்படாமல் தடுப்பதற்காகவும், ஜி -20 நாடுகளுக்கு தலைமையேற்றுள்ள இந்தியா அனைத்து துறைகளிலும் உலகளவில் முன்னேற்றம் காண வேண்டியும் மத்திய, மாநில அரசுகளால் நாட்டு மக்களின் ஆரோக்கியம், பொருளாதார நிலை மேம்படுவதற்காகவும் ஸ்ரீதட்சண காளி சித்தர் பீடம் சார்பில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட உள்ளன.

இதன் ஒரு பகுதியாக, பவுர்ணமி தினமான டிசம்பர் 7-ம் தேதி காற்று புக முடியாத, பாதாள அறைக்குள் சமாதி நிலைக்குச் சென்று பல மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் உயிருடன் வரக்கூடிய சமாதி தியானம் மேற்கொள்ள உள்ளேன் என்று தெரிவித்தார்.
