
நான்கு டன் அரிசி மாயம்.. டிரைவர்களுக்கு வலை..
ஈரோடு மாவட்டம் பவானி கோட்டை அண்ணா நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் செந்தில் குமார் (44 ). திருச்சியில் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார் .
இவரது நிறுவனத்தில் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி, அந்தோணி ஆகிய இருவரும் டிரைவர்களாக பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் செந்தில் குமாருக்கு சொந்தமான லாரி, அரிசிலோடு ஏற்றுவதற்காக கொல்கத்தா புறப்பட்டு சென்றது.


அந்த லாரியை கருப்புசாமி, அந்தோணி ஆகிய இருவரும் ஓட்டி சென்றனர்.
கடந்த 5-ந்தேதி 43 டன் அரிசியை ஏற்றிக்கொண்டு அந்த லாரி திருச்சி நோக்கி புறப்பட்டது. கடந்த 10-ந்தேதி முறைப்படி திருச்சியில் அரிசியை டெலிவரி செய்ய வேண்டும். ஆனால் லாரி குறித்து தகவல் இல்லை.
ஜி.பி.எஸ் வழியாக பார்த்ததில் திருச்சி சென்னை பைபாஸ் ரோட்டில் உள்ள சஞ்சீவி நகர் சர்வீஸ் ரோடு பகுதியில் லாரி மட்டும் நின்றது கண்டு பிடிக்கப்பட்டது.
அந்த லாரியில் இருந்த அரிசி மூட்டைகளை எடை போட்டு பார்த்த போது 39 டன் அரிசி மட்டுமே இருந்தது. 4 டன் அரிசியை கருப்புசாமி, அந்தோணி ஆகிய இருவரும் திருடிக் கொண்டு தப்பிச்சென்றது தெரியவந்தது.
இது தொடர்பாக செந்தில் குமார், கோட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் வழக்கு பதிவு செய்து, கருப்புசாமி, அந்தோணி ஆகிய இரண்டு பேரையும் தேடி வருகின்றார்.
