
திருச்சியில் தொடரும் வேட்டை ரவுடிகளுக்கு காப்பு!
திருச்சியின் பல்வேறு பகுதிகளில் கத்தியை காட்டி மிரட்டியதாக ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். திருச்சி குண்டூர் பர்மா காலனியை சேர்ந்தவர் பாலன். (60).
பாலக்கரை சங்கிலியாண்டபுரத்தில் நின்று கொண்டு இருந்தார்.
திருச்சி வரகனேரி அனந்தபுரம் மேட்டுத்தெரு ப.முகமது முபாரக் ( 32), பாலக்கரை முதலியார் சத்திரம் ஆசாரி தெரு மணிகண்டன், சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகர் இளையராஜா (38) ஆகிய மூன்று பேரும் கத்தியை காட்டி மிரட்டி பாலனிடம் இருந்து பணத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

இது குறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர். கைதான மூன்று பேரும் பிரபல ரவுடிகள் என்பதும், முகமது முபாரக் மீது 16 வழக்குகளும், மணிகண்டன் மீது 20 வழக்குகளும், இளையராஜா மீது 10 வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
காந்தி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரியிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த திருச்சி எடத்தெரு ரோடு மதுரை வீரன் தெரு ஜெகதீசன் 50) என்பவரை காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

இவர் மீதும் 24 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் டிபன் கடை உரிமையாளர் காமராஜிடம் பணம் பறித்த திருச்சி தேவதானம் குருசாமி நகரை சேர்ந்த ஆண்ட்ரூஸ் (30) என்பவரை கோட்டை போலீசார் கைது செய்தனர். இவர் மீதும் 7 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
