
சொர்க்கவாசல் நிகழ்ச்சிக்கு தயாராகுது ஸ்ரீரங்கம்!
திருச்சி ஸ்ரீரங்கம் பூலோக வைகுண்டம்,108 வைணத்தலங்களில் முதன்மையானது என்ற சிறப்பு பெற்ற திருத்தலம் ஆகும்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மார்கழி மாதத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவில் சொர்க்கவாசல் திறப்பு பிரசித்தி பெற்றதாகும். இதில் ராப்பத்து, பகல் 10 என 20 நாட்கள் நடைபெறும்.
வைகுண்ட ஏகாதசி விழாவில் தமிழ்நாடு மட்டும் இல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்து செல்வார்கள்.
இதில் சொர்க்கவாசல் திறப்பு உள்ளிட்ட பத்து நாட்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள், ஸ்ரீரங்கம் வந்து செல்வார்கள். வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு அம்மா மண்டபத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து வந்த புகாரை அடுத்து, நெடுஞ்சாலைத்துறை உத்தரவின்படி மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் உத்தரவின் பெயரில் ஆக்கிரமிப்புகள் கடைகள் அகற்றப்பட்டன.

ஸ்ரீரங்கம் மண்டலம் எண் 1 உதவி ஆணையர் ரவி மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் மூலம் சுமார் 25க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். அதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் மற்றும் ஸ்ரீரங்கம் மண்டலம் எண் 1 உதவி ஆணையர் ரவி ஆகியோர், ஸ்ரீரங்கத்தில் ஆய்வு நடத்தினர்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அம்மா மண்டபத்தில் சுகாதார முன்னெச்சரிக்கை குறித்தும் , தூய்மை பணியாளர்கள் மேற்கொள்வது குறித்தும் ஆய்வு நடத்தி ஆலோசனை வழங்கினர்.
ஸ்ரீரங்கம் கோயிலை சுற்றி உள்ள உத்தர வீதிகளில் நடைபெற்று வரும் தார் சாலை அமைக்கும் பணிகளையும் மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார். தொடர்ந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ரங்கா ரங்கா கோபுரம் அருகேஉள்ள நவீன கழிவறை போதுமானதாக இல்லை என்பதால் கூடுதல் கழிவறைகள் கட்டப்பட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதை அடுத்து மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் மற்றும் உதவி ஆணையர் ரவி உள்ளிட்டோர் கிழக்கு கோபுரம் பகுதியில் கழிவறை கட்டுவதற்காக இடம் குறித்து ஆய்வு நடத்தினர்.
மேலும் வைகுண்ட ஏகாதசி நாட்களில் இந்தப் பகுதியில் நடமாடும் கழிவறை வாகனங்கள் அமைக்கப்படும், இடம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வை தொடர்ந்து கிழக்கு கோபுரம் அருகே பக்தர்களின் வசதிக்காக ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் நவீன கழிவறை கட்டுவதற்கான முன்னேற்பாடுகளை எடுக்க மாநகராட்சி ஆணையர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
