குடும்ப தகராறில் திருச்சி மாநகராட்சி ஊழியர் தற்கொலை!
திருச்சி கருமண்டபம் சமத்துவ நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் வயது (25). இவர் ஒரு திருச்சி மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும் ராஜேஸ்வரி என்பவருக்கும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு குழந்தை உள்ளது.

இந்த நிலையில் ரவிக்குமார் அடிக்கடி குடிபோதையில் மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.
அதை தொடர்ந்து ரவிக்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் அவருக்கு கவுன்சிலிங் கொடுத்தனர். அதன் பின்னர் ராஜேஸ்வரி கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது குழந்தையுடன் தாய் வீட்டுக்கு சென்றார்.
இந்த நிலையில் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான ரவிக்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனைவி சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இது தொடர்பாக அவரது தாய் சுமதி கன்டோன்மென்ட் போலீசில் புகார் செய்தார். அதன் பெயரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
